UPDATED : பிப் 04, 2025 09:13 PM
ADDED : ஜன 31, 2025 12:14 PM

சென்னை: 'தமிழக உள்துறை செயலாளர், இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, இன்று மாலை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐகோர்ட்டில் ஆஜரானார்.
சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, 'கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீசார் செயல்படுத்துவதில்லை' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், 'இது தொடர்பான விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராக வேண்டும்' என்று உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இன்று காலை அரசு தரப்பில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, 'இன்று மாலை 4.30 மணிக்குள் தமிழக உள்துறை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்.
இல்லையெனில், சுப்ரீம் கோர்ட்டில் அவர் தடை உத்தரவை பெற வேண்டும். இவை இரண்டையும் செய்யவில்லை எனில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்' என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவை தொடர்ந்து இன்று மாலை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் கோர்ட்டில் ஆஜரானார்.அப்போது நீதிபதி, 'உள்துறை செயலாளரை நேரில் வரவழைப்பது நோக்கமல்ல; போலீஸ் துறையில் நடப்பதை தெரியப்படுத்தவே நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது,' என்றார். நிலுவை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை விரைவுபடுத்தும்படி போலீசாருக்கு அறிவுறுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

