ADDED : ஆக 12, 2026 03:51 AM
அஜித் படத்தில் மோகன்லால், வெங்கடேஷ்
ஆதிக் ரவிசந்திரன் இயக்க, அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' படம் அடுத்த மாதம் துவங்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்களாம். இப்போது 'ஜெயிலர் 2'வில் நடித்துள்ளார் மோகன்லால். ஹீரோயின் தேர்வு நடக்கிறது. படத்தை தயாரிக்கும் அஜித் மனைவி, நடிகை ஷாலினியையும் இதில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க பேசுகின்றனர்.
மீண்டும் லோகேஷ், அருண் இணைகிறார்கள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டிசி. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம். இருந்தாலும் படம் ரூ.50 கோடி வசூலை எட்டி உள்ளது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி இணையப் போகிறதாம். அனிருத்தே இசையமைக்க போகிறார். இது வேறு கதை அல்லது 'டிசி 2 'வாக கூட உருவாக வாய்ப்புள்ளது.
மீண்டும் 'பொன்னியின் செல்வன்' கூட்டணி
நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மோகன்ராஜா. இதில் ஹீரோயினாக நடிக்க பலர் போட்டி போட்ட சூழலில் திரிஷாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதற்குமுன்பு பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, திரிஷா நடித்தனர். மோகன்ராஜாவின் 'உனக்கும் எனக்கும்' படத்தில் திரிஷா நடித்துள்ளார்.
'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டானிக்' தரும் 'டாக்சிக்'
முதல்வர் விஜயின் கடைசி படமாக வெளிவந்த 'ஜனநாயகன்' எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை. இதனால் வினியோகஸ்தர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை நஷ்டம் வரலாம். இதை சரிகட்டும் விதமாக இதன் தயாரிப்பாளர் தங்களது அடுத்த படமான 'டாக்சிக்' உரிமையையும் இதே வினியோகஸ்தர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த முடிவு 'ஜனநாயகன்' படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு 'டானிக்' போல இருக்குமா என்பது 'டாக்சிக்' படம் வெளிவந்த பின்புதான் தெரியும்.
எதிர்காலத்தை கணிக்கும் ஆனந்தி
காமராஜ் மனோன்மணி என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'சொடக்கு'. நட்டி நட்ராஜ், விதார்த், ஆனந்தி, ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடந்துள்ளது. இதில் சமையல் கலைஞராகவும், எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவராகவும் ஆனந்தி நடித்துள்ளார். மனநல டாக்டராக நட்டி வருகிறார். மலேசிய தமிழர்களின் பின்னணியில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
'சேயோன்' படத்தில் சீமான்
கமல் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் படம் 'சேயோன்'. மே 18ல் மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. நேற்று முதல் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மீண்டும் மதுரையில் துவங்கியது. இதில் இயக்குனர், நடிகர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார். கருமாத்துார், விருமாண்டி சாமி கோவில் பின்னணியில் இந்த படம் தயாராகிறது.
தாலிய காணோம்...
'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும், பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்தவர் வினோதினி. இவர் வெளியிட்ட வீடியோவில், ''மசாஜ் செய்ய ஸ்பா ஒன்றுக்கு சென்றபோது தாலி செயினை கழற்ற சொன்னார்கள். அதை ஒரு டப்பாவில் போட்டு வைத்தனர். உறவினரின் இறப்பு செய்தி வந்ததால் தாலியை வாங்க மறந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்கு பின் அந்த ஸ்பாவிற்கு சென்று எனது தாலியை கேட்டேன். ஆனால் இல்லை என சொல்லிவிட்டனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்'' என்கிறார்.
