மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த மதுரை சிறுமி
மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த மதுரை சிறுமி
ADDED : ஜன 26, 2026 04:52 AM

மதுரை: தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் ஜன., 23ல் தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். இதில் பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த சிறுமி சகஸ்ரா 9, அவரது கவனத்தை ஈர்த்து பாராட்டு பெற்றார்.
சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை பார்த்ததும், பேச்சை நிறுத்திய மோடி, அச்சிறுமியின் பெயர், முகவரியை கேட்டு வரும்படி மைக்கில் தெரிவித்தார். இதையடுத்து பாதுகாவலர்கள், சிறுமி சகஸ்ராவிடம் வந்து பிரதமரின் ஓவியத்தைப் பெற்று மேடைக்கு கொண்டு சென்றனர். பிரதமரின் கவனத்தையே ஈர்த்ததால் கட்சியினரின் கவனத்தையும் சிறுமி பெற்றார்.
அச்சிறுமி மதுரை புதுார் மண்மலைமேட்டைச் சேர்ந்த திலீபன் - கவிதா தம்பதி மகள். கே.கே.நகர் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.
மகிழ்ச்சியில் திக்குமுக்காடினோம் சிறுமியின் தாய் கவிதா கூறியதாவது: நான் பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட நிர்வாகி. கணவர் பா.ஜ., அயலக பிரிவின் மாவட்ட செயலாளர். தங்கை சிறப்பாக ஓவியம் வரைவார். அவருடன் இருந்ததால், சகஸ்ராவும் பிரஷ்ஷை பெற்று ஓவியத்தில் ஆர்வம் காட்டினார். அதனால் அவர் பொம்மைகளுடன் விளையாடுவதுகூட குறைவு. மதுராந்தகம் கூட்டத்திற்கு மகளையும் அழைத்துச் சென்றோம். பிரதமருக்கு அவரது தாய் திலகமிடுவது போலவும், பின்னணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொற்றாமரைக்குளம், அதில் தங்கத்தாமரை இருப்பது போன்ற ஓவியத்தையும் வரைந்து எடுத்துச் சென்றோம்.
கூட்டத்தில் படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் செல்ல முடியாமல் நின்றோம். ஆர்வம் மிகுதியால் தனது ஓவியத்தை சகஸ்ரா துாக்கி காட்டினார். அது பிரதமரின் கவனம் பெற்றுவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்காததால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்.
பிரதமரே அழைத்துக் கேட்டது, எனது மகளுக்கு பெரும் ஊக்கமாக விட்டது. பிரதமர் விரைவில் வாழ்த்துச் செய்தி அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மோடி ஆப், அமைச்சர் பியூஸ்கோயல், வானதிசீனிவாசன் வலைத்தள பக்கங்களில் வாழ்த்துச் செய்திகளுடன் பகிரப்பட்டுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.

