நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
UPDATED : ஜன 18, 2024 09:26 AM
ADDED : ஜன 17, 2024 07:16 AM

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று(ஜன.,17) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் பரிசாக பெற்றார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
90 பேர் கொண்ட மருத்துவக்குழு மற்றும் 70 பேர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களையும், காளைகளுக்கும் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறுதிகட்ட பரிசோதனை செய்தனர். மாவட்ட எஸ்.பி., டோங்கரே தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
களத்தில் துள்ளி வரும் காளைகளை, இளைஞர்கள் அடக்கினர். சில காளைகள் சிக்கினாலும், பல காளைகள் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. சிறப்பாக களமாடிய முதல் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
18 காளைகளை அடக்கிய வீரர்
மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தார்; அவருக்கு பைக் பரிசு அளிக்கப்பட்டது. குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்தார்.

தகுதி நீக்கம்
ஜல்லிக்கட்டில் 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 5 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.
810 காளைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று மொத்தம் 810 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
83 பேர் காயம்

மோதிரம் பரிசு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

