திருவண்ணாமலையில் மஹா தீபம் விண்ணதிர பக்தர்கள் 'அரோகரா' கோஷம்
திருவண்ணாமலையில் மஹா தீபம் விண்ணதிர பக்தர்கள் 'அரோகரா' கோஷம்
ADDED : டிச 04, 2025 05:55 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி, 2,668 அடி உயர அண் ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை, 'மஹா தீபம்' ஏற்றப்பட்டது. பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ., 24ல், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
'பரணி தீபம்' முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபத்தையொட்டி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், 'ஏகன் - அனேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில், நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அதிகாலை, 4:00 மணிக்கு, 'பரணி தீபம்' ஏற்றப்பட்டது.
பின்னர் அதை, சிவாச்சாரியார்கள் கையில் ஏந்திச்சென்று, அம்மன் சன்னிதி உட்பட கோவிலிலுள்ள அனைத்து சன்னிதிகளிலும், 'பரணி தீபம்' ஏற்றினர்.
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் தன் இடப்பாகத்தை அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய், கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தவாறே மாலை, 5:59 மணிக்கு வெளியே வர, காலையில் ஏற்றப்பட்ட, 'பரணி தீபம்' விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டது.
அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காட்டப்பட்டது.
அதே நேரத்தில், அண்ணாமலையார் மலை உச்சியில், 'மஹா தீபம்' ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
தொடர்ந்து, 11 நாட்கள் வரை எரியும், இந்த 'மஹா தீபம்' பக்தர்களுக்கு, 40 கி.மீ., வரை தெரியும்.

