கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த நபர் கைது
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த நபர் கைது
ADDED : ஜன 22, 2025 02:37 AM

கள்ளக்குறிச்சி, ஜன. 22-
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரில் 'ஸ்கேன்' வாயிலாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவிப்பதாக, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தர்மபுரி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில் கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு ஒரு வீட்டில், கர்ப்பிணியருக்கு 'ஸ்கேன்' செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் பணியில் இரண்டு நபர்கள் ஈடுபட்டது தெரிந்தது. அலுவலர்களை கண்டதும் இருவரும் தப்ப முயன்றனர். அதில், ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் வடக்கனந்தலை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார், 33. பிளஸ் 2 படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும் பணியில் ஈடுபடுவது தெரிந்தது.
இதையடுத்து 'ஸ்கேன்' கருவியை பறிமுதல் செய்து, ரஞ்சித்குமாரை கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய நபர் குறித்து விசாரிக்கின்றனர். ரஞ்சித்குமார் ஏற்கனவே கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த வழக்கில் கைதாகி, ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது.