கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
UPDATED : பிப் 07, 2025 08:00 PM
ADDED : பிப் 07, 2025 07:56 AM

வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய விவகாரம் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 4 மாத கர்ப்பணி ஒருவர், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்து உள்ளார். ரயில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சென்ற போது, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு, ஜோலார்பேட்டையில் ஏறிய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளவிட்டதாக புகார் எழுந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இ.பி.எஸ்., கண்டனம்
அவரது அறிக்கை: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.
திராவிட மாடல் தி.மு.க., அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
மகளிர் ஆணையம் விசாரணை
இந்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவம் குறித்து 3 நாட்களில் தமிழக போலீசார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்பி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.