சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது; நிலக்கல்லில் ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது; நிலக்கல்லில் ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்
ADDED : நவ 17, 2024 12:54 AM

சபரிமலை,: பக்தர்களின் சரண கோஷம் முழங்க நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது. அதிகாலையில் ஐயப்பனைவணங்கிட திரளான பக்தர்கள் கூடியிருந்தனர்.
நேற்று அதிகாலை 3:00மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயிலை வலம் வந்து ஐயப்பன் சன்னதியின் தங்க வாசலை திறந்தபோது குழுமியிருந்த பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் மலைமுழுதும் எதிரொலித்தது.
தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு சன்னதியில் ஐயப்பன் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 3:30 -க்கு நெய்யபிஷேகம் தொடங்கியது. பக்தர்கள் கூட்டத்தால் பெரிய நடைப்பந்தலில் நிரம்பி வழிந்தது.
தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை நடந்தன. தினமும் அதிகாலை 3:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 3:00 முதல் இரவு 11:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அமைச்சர் பேட்டி
தேவசம் அமைச்சர் வாசவன் சன்னிதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நவ.15-ல் ஆன்லைன் முன்பதிவு மூலம் 26 ஆயிரத்து 942 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 1872 பேரும், வி.ஐ.பி.க்கள் மொத்தம் 30 ஆயிரத்து 687 பேர் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க தகுந்த முன்னேற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. தினமும் 70 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமும், 10 ஆயிரம் பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும் தரிசனம் செய்ய முடியும்.
வரும் நாட்களில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்து ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
போலீசாரின் சிறப்பான செயல்பாட்டால் 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை ஏற்றி விடமுடிகிறது. இதனால் பெரியநடைப் பந்தலில் பக்தர்களின் கூட்டம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலக்கல்லில் மினிபஸ்
நிலக்கல்லில் 7 ஏக்கரில் 10 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு கேரள அரசு பஸ்ஸில் சென்று தரிசனம் முடித்து திரும்பும் போது களைப்பில் வாகனங்களைத் தேடி நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சில தனியார் வாகனங்கள் இவ்வாறு தேடி அலையும் பக்தர்களை அழைத்துச்செல்ல அதிக கட்டணம் வசூலித்து வந்தனர்.
இதை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் நியமித்த தனி அதிகாரி ஜெயகிருஷ்ணன் கேரள போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், பக்தர்கள் தங்கள் வாகனங்கள் நிற்கும் பகுதிக்கு செல்ல கேரள அரசு போக்குவரத்து கழகம் இலவசமாக மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறினார்.
போக்குவரத்து துறை 10 ரூபாய் கட்டணத்தில்இன்று முதல் பஸ்களை இயக்கும் என்று அமைச்சர் கணேஷ்குமார் கூறியுள்ளார்.