ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் கட்டாயம்: வங்கிகளுக்கு காவல் துறை வலியுறுத்தல்
ஏ.டி.எம்.,களில் காவலாளிகள் கட்டாயம்: வங்கிகளுக்கு காவல் துறை வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2024 05:16 AM

சென்னை : ஏ.டி.எம்., மையங்களில், 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்குமாறு, வங்கிகளை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த, 'மேவாட்' கொள்ளையர், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம்., மையங்களை குறிவைத்து கொள்ளை அடித்துள்ளனர். கேரளாவில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பிய, மேவாட் கொள்ளையரை நாமக்கல் போலீசார் பிடித்தனர்,
இந்நிலையில், ஏ.டி.எம்., மையங்களில் பகல், இரவு நேர காவலாளிகளை நியமிக்க வேண்டும் என, காவல் துறை சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஏ.டி.எம்., மையங்களில், 60 வயதுக்கும் மேற்பட்டோரை, காவலாளியாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். பகல், இரவுக்கு தனித்தனி காவலாளிகளை நியமிக்க வேண்டும். இரவு நேரத்தில், காவலாளி பணியில் இருப்பது கட்டாயம்.
ஏ.டி.எம்., மையங்களில், பெயரளவில் இல்லாமல் தரமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதன் இயக்கம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்களுக்கு வந்து செல்வோரை பதிவு செய்யும் வகையில், கேமராக்கள் பொருத்த வேண்டும். அடிக்கடி வந்து செல்லும் சந்தேக நபர்கள் குறித்து படம் பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
ஏ.டி.எம்., மையம் அருகே நீண்ட நேரம் அமர்ந்து இருப்போர், அந்த மையத்தை சுற்றி வரும் சந்தேக நபர்கள் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏ.டி.எம்., மையங்களில் எச்சரிக்கை அலாரம் கட்டாயம். வங்கி அதிகாரிகள், 'வாட்ஸாப்' குழுக்கள் துவங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ரோந்து போலீசாரிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என, வங்கி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.