பட்டாசு தொழில் 'இழிவானது' என குறிப்பு; மாற்ற உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
பட்டாசு தொழில் 'இழிவானது' என குறிப்பு; மாற்ற உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 06:54 AM

சிவகாசி: 'தமிழக அரசின் தொழில் வரையறை ஆவணங்களிலும், படைக்கல சட்டத்திலும் பட்டாசு தொழிலை இழிவான, அருவருக்கத்தக்க என குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டான்பாமா சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
சிவகாசி பட்டாசு தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதில் 70 சதவீதம் பெண்கள். நாட்டின் மொத்த தேவையில், 95 சதவீத பட்டாசு விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பதிவேடுகள், படைக்கல சட்டத்தில் 'இழிவான, அருவருக்கத்தக்க' என பட்டாசு தொழில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதை திருத்தம் செய்து, மரியாதைக்குரிய வகையில் புதிய வரையறை செய்ய வேண்டும். பட்டாசு தொழிலுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதிட வேண்டும்.
தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளில் பல்வேறு இடங்களில் வேறுபாடு உள்ளதால், கடைபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், வெடிபொருள் கட்டுப்பாட்டு மசோதா, 2025ல் பசுமை பட்டாசு உற்பத்தியில், பேரியம் நைட்ரேட் 40 சதவீதம் வரை பயன்படுத்தலாம் என்பதை சேர்க்க வேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களில் மாசு விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவிலும் முக்கிய பண்டிகை நாட்களில், சுற்றுச்சூழல் விதிகளில் விலக்கு அளிக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

