தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கல்யாண வைபோகம் ஸ்பெஷல்: அமைதியான நதியினிலே ஓடம் ...

கல்யாண வைபோகம் ஸ்பெஷல்: அமைதியான நதியினிலே ஓடம் ...

கல்யாண வைபோகம் ஸ்பெஷல்: அமைதியான நதியினிலே ஓடம் ...


ADDED : மார் 13, 2013 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2013 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் திருமண உறவு என்பது புனிதமானதாக கருதப்படுகிறது. திருமணம் குறித்த பழமொழிகள் ஏராளம் உண்டு. வள்ளுவரே இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரங்களில் திருமண வாழ்க்கை குறித்து அழகாக விளக்கியுள்ளார். திருமணவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அது ஒருநாள் விழா மட்டுமே. ஆனால் மணமக்களுக்கு அதுதான் வாழ்வின் துவக்கம். இத்தகைய பெருமை பெற்ற மணவாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வது, மணமக்களின் கையில் தான் உள்ளது. பொறுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற குணங்களின் மூலம் மணவாழ்க்கையிலேயே சொர்க்கத்தை காணலாம் என வள்ளுவர் கூறியுள்ளார். இந்த குணங்களை வளர்க்க தம்பதிகள் யோகா, தியானத்தில் ஈடுபடுவது சிறந்தது. இந்தியாவில் திருமணமாகதவர்கள் முழுமையடைந்தவர்களாக கருதப்படுவதில்லை. திருமணம்தான் ஒருவரை முழுமைப்படுத்துகிறது என்பது நம்பிக்கை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலே உண்டு. மண வாழ்க்கை, ஒருவரை பண்பட்டவராக ஆக்குகிறது என்று கூறுவர். இத்தகைய மணவாழ்க்கையை அமைதியாகவும், அழகாகவும் அமைத்துக் கொள்ள தியான வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

எங்க வீட்டு மாப்பிள்ளை:

மாப்பிள்ளையை ஊர்நடுவில் இருக்கும் கோயிலில் இருந்து மணவிழாவிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி மாப்பிள்ளை அழைப்பு. 'இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை' என்று பெண்வீட்டார் ஊராருக்கு அறிமுகப்படுத்த இதை நடத்துகின்றனர். மணமகன் மீது ஏதாவது குற்றங்குறை, வேண்டாத சகவாசம் இருந்தால் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சூட்சுமும் இதில் அடங்கியிருக்கிறது. மாப்பிள்ளை சொக்கத் தங்கம் தான் என்பதை அறிந்து கொள்ள உரைகல்லாக மாப்பிள்ளை அழைப்பு இருக்கிறது. வடநாட்டில் 'பராத்' என்ற பெயரில் விமரிசையாக இதை நடத்துவர்.

திருமணம்... பலவிதம் :

இந்தியாவில் ஒவ்வொரு மொழி, கலாசாரத்திற்கேற்ப திருமண முறைகளிலும் வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை. காண்போரை கவர்பவை.

தமிழ் திருமணம்:

தமிழ் திருமணங்கள், பெரும்பாலும் நெருங்கிய, தூரத்து உறவினர்கள் கலந்து கொள்ளும் சிறப்பான வைபவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு சமூகமும், தனித்தனி திருமண சடங்குகளை நடத்துகின்றன. அடிப்படையில் சில சடங்குகள் பொதுவானவை.

திருமணத்திற்கு முன்

* பந்தக்கால் முகூர்த்தம்

* மாப்பிள்ளை அழைப்பு

* நிச்சயதார்த்தம்

* பத்திரிகை வாசித்தல்

திருமணத்தின் போது

* மாங்கல்ய ஸ்நானம்

* காசி யாத்திரை

* ஊஞ்சல்

* கன்யாதானம்

* முகூர்த்தம்

திருமணத்திற்கு பின்

*சம்மந்தி மரியாதை

* வரவேற்பு

தெலுங்கு திருமணம்:

தெலுங்கு திருமணமும், பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. மக்கள், ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கையுடையவர்கள் ஆதலால், திருமண நிகழ்வில் ஆன்மிகம் சார்ந்த சடங்கு முதன்மை பெறுகிறது. தெலுங்கில் அனைத்து சமுகத்தினருக்கும், அடிப்படையான சில சடங்குகள்:

திருமணத்திற்கு முன்

* முகூர்த்தம்

* காசியாத்திரை

* மங்கள ஸ்நானம்

* ஆர்த்தி

* கணேஷ், கவுரி பூஜை

திருமணத்தின் போது

* கன்யா தானம்

* சுமங்கலி

திருமணத்திற்கு பின்

* கிரகப்பிரவேசம்

அசாம் திருமணம்:


அசாம் திருமண சடங்குகள் எளிமையானவை. திருமணத்தின் போது 'பைய நாம்' எனும் பாடல் பாடப்படுகிறது. பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவதாக உள்ளது.

திருமணத்திற்கு முன்

* ஜூரன் விழா

* டெல்திய வழக்கம்

* பனி டோலா

* நூனய் பாரம்பரியம்

திருமணத்தின் போது

* திருமண சடங்கு

* திருமண வரவேற்பு

* மாப்பிள்ளை அழைப்பு

* திருமண விழா

கன்னட திருமணம்:


கன்னட திருமணங்கள், மகிழ்ச்சியாக, எளிமையாக இருக்கும். சடங்குகள் சுவராஸ்யமானவை. அங்கு வாழும் பல்வேறு சமூக மக்கள், பல வித திருமணம் நடத்தினாலும், அடிப்படையான சில சடங்குகள்:

திருமணத்திற்கு முன்

* நாண்டி வழக்கம்

* காசியாத்திரை

* தேவ் காரிய விழா

திருமணத்தின் போது

* மண்ட பூஜை, வர் பூஜை

*சப்தபாடி விழா

திருமணத்திற்கு பின்

* கிரகபிரவேசம்

* பெயர் மாற்ற விழா

* ஆடை மாற்றுதல்

* திருமண வரவேற்பு

மகாராஷ்டிரா திருமணம்:

மகாராஷ்டிரா திருமணங்கள், வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. இசை வாத்தியங்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. திருமண விழா காலை துவங்கி மாலை வரை நடைபெறுகிறது. ஒளி காட்சியுடன், திருமண வரவேற்பு இரவு நேரத்தில் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு முன்

* சாகார் பூத விழா

* சிமன்ட் பூஜை

திருமண சடங்குகள்

* திருமண விழா

* லட்சுமி நாராயண் பூஜை

* ஜால் பிர்வானே

திருமணத்திற்கு பின்

* சுன் முக் பாக்னி

* மணமக்கள் பெயர் மாற்றுதல்

* திருமண வரவேற்பு

ஒடிசா திருமணங்கள்:

ஒடிசா திருமண சடங்குகளும் எளிமையானவை. திருமண சடங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண நாளின் போது, மணமக்களின் அம்மாக்கள் திருமண விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள்.

திருமணத்திற்கு முன்

* ஜாயே அனுகுலோ விழா

* மாங்கன் பாரம்பரியம்

* தியா மங்கள பூஜை

திருமணத்தின் போது

* கன்யா தானம்

* காத காந்தி வழக்கம்

திருமணத்திற்கு பின்

* கிரகபிரவேச பாரம்பரியம்

* அஸ்த மங்கள வழக்கம்

சிந்தி திருமணம்:

சிந்தி திருமணம் கடினமானது. திருமணங்கள், மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவிலேயே இறுதி செய்யப்படும். பூஜாரி ஒருவரே திருமண நாளை முடிவு செய்வார்.

திருமணத்திற்கு முன்

*பாக்கி மிஸ்ரி விழா

* மெகந்தி

* சங்கீத் பார்டி

திருமணத்தின் போது

* திரட் விழா

* ஸ்வாகத வழக்கம்

* திருமண விழா

* கன்யாதான்

திருமணத்திற்கு பின்

* தாதர் விழா

* சாட்ராக் வழக்கம்

கல்யாண சுந்தரர் :

திருமணத்தலங்களில் மதுரையும் ஒன்று. மீனாட்சி சொக்கநாதர் திருமணக்கோலம் உலகப்புகழ் மிக்கது. திருமணப் பத்திரிகையில் இது தவறாமல் இடம்பெற்றிருக்கும். இதில் மீனாட்சி நடுவில் இருக்க, வலப்புறம் சகோதரர் திருமாலும், இடப்புறம் சொக்கநாதரும் நின்றபடி காட்சிதருவர். இக்கோலத்தை 'கல்யாணசுந்தரர்' என்று குறிப்பிடுவர். மணமகளாக மீனாட்சி நாணத்துடனும், மணமகனாக சொக்கநாதர் கம்பீரத்துடனும் காட்சிதருவர். மைத்துனர் என்னும் முறையில் திருமால், கெண்டியில் தீர்த்தத்தை சொக்கநாதர் கையில் தாரை வார்த்தபடி இருப்பார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டால் விரைவில் திருமணயோகம் கைகூடும்.

என்ன பொருத்தம்... இந்த பொருத்தம் :

திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் முக்கியமானது. பெண், மாப்பிள்ளை ஜாதகத்தின் அடிப்படையில் பத்து பொருத்தம் இருக்கிறதா என்பதை ஜோதிடரிடம் கணிப்பர். இது குறித்து ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி கூறியதாவது: தினப்பொருத்தம் : பெண் நட்சத்திரம் முதல் மாப்பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்போது 2,4,6,8,9,11, 13,15,17,18,20,22,26,27 நட்சத்திரங்கள் உத்தமம்.

கணப்பொருத்தம் : பெண், மாப்பிள்ளை நட்சத்திரம் ஒரே கணமானால் உத்தமம். தேவ மனுஷ்ய கணமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம். ஸ்திரி ராட்சஷ கணமாக இருந்து, புருஷன் தேவகணமாகவோ, மனுஷ்யகணமாகவோ கூடாது. ஸ்திரி மனுஷ கணமும், புருஷன் ராட்சஷ கணமுமாக இருந்தால் பொருந்தும்.

மகேந்திரப்பொருத்தம்: பெண் நட்சத்திரம் முதல் மாப்பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்போது 1,4,7,10,16,18,19,22,25 ஆனால் உத்தமம். இந்த முதல் மூன்று பொருத்தங்களில் ஏதாவது இரண்டு இருப்பது நல்லது.

ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் முதல் எண்ணும்போது புருஷநட்சத்திரம் 13க்கு மேலானால் உத்தமம். சிலர் 7க்கு மேலானால் ஓரளவுக்குப் பொருந்தும் என்றும் சொல்லுவர்.

யோனிப்பொருத்தம் : நட்சத்திர யோனிகள் குறிப்பிட்டபடி (யானைக்கு சிங்கம், மனிதர்) (குதிரைக்குப் பசு) (எருமை, பசு, கடா, மான், நாய் இவைகளுக்குப் புலி) (குரங்குக்கு ஆடு)(எலிக்கு பூனை, பாம்பு), (பூனைக்குப் புலி நாய்) பகையாகும். மற்றவை நட்பாகும். இரண்டும் புருஷயோனிகளாக இருக்கக் கூடாது. பெண் ஸ்திரியோனியும், மாப்பிள்ளை ஆண்யோனியும் ஆக இருந்தால் உத்தமம்.

ராசிப்பொருத்தம் :பெண்ணின் ராசி முதல் மாப்பிள்ளை ராசிவரை எண்ணினால் 9 ராசிக்கு மேலாயின் உத்தமம். 8ம் ராசியாக இருந்தால் கூடாது. இந்த மூன்று பொருத்தங்களில் ஏதாவது இரண்டு இருப்பது சிறப்பு.

ராசி அதிபதி பொருத்தம்: பெண் ராசி அதிபதிக்கும், மாப்பிள்ளை ராசி அதிபதிக்கும் நட்பாகில் உத்தமம். பகை கூடாது.

வசியப்பொருத்தம் : மேஷத்திற்கு சிம்மம், விருச்சிகம், ரிஷபத்திற்கு கடகம், துலாம், மிதுனத்திற்கு கன்னி, கடகத்திற்கு விருச்சிகம், தனுசு, சிம்மத்திற்கு மகரம், கன்னிக்கு ரிஷப,மீனம், துலாத்திற்கு மகரம், விருச்சிகத்திற்கு கடகம், கன்னி, தனுசுக்கு மீனம், மகரத்திற்கு கும்பம், கும்பத்திற்கு மீனம், மீனத்திற்கு மகரம் வசியமாகும். பெண் ராசிக்கு மாப்பிள்ளை ராசி வசியமானால் உத்தமம்.

ரஜ்ஜு பொருத்தம் : மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரோ ரஜ்ஜு ஆகும். ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகியவை கண்டரஜ்ஜு எனப்படும். கார்த்திகை, புனர்பூசம்,உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை வயிறுரஜ்ஜு ஆகும். பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகியவை துடைரஜ்ஜு ஆகும், அசுவினி, ஆயில்யம், மகம்,கேட்டை, மூலம், ரேவதி ஆகியவை பாதரஜ்ஜு எனப்படும். பெண், மாப்பிள்ளை ஒரே ரஜ்ஜுவாக இருக்கக்கூடாது. வெவ்வேறு ரஜ்ஜுவாக வந்தால் நல்லது.

நாடிப்பொருத்தம் : அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,மூலம், சதயம், பூரட்டாதி ஆகியவை பார்சுவநாடியில் அடங்கும். பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகியவை மத்யநாடியில் அடங்கும். கார்த்திகை,ரோகிணி, ஆயில்யம்,மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகியவை ஸமானநாடியில் அடங்கும். பெண் நட்சத்திரமும் மாப்பிள்ளை நட்சத்திரமும் மத்யநாடியானால் கூடாது. ஸமான நாடியானால் தம்பதிகள் சவுக்கியமாக இருப்பர். வெவ்வேறு நாடியாக வந்தால் தோஷமில்லை. இந்த நான்கு பொருத்தங்களில் மூன்று பொருத்தம் இருப்பது சிறப்பு. பத்துபொருத்தங்களில் ஸ்திரிதீர்க்கம், கணம், ரஜ்ஜு, நாடி, வசியம் ஆகிய ஐந்தும் மிக முக்கியமானவை.

சுதந்திரமா? கட்டுப்பாடா?

திருமணம் என்பது இருவரை இணைக்கிற பந்தம். அதாவது கட்டுவது. கட்டிப்போட்டால் சுதந்திரக்காற்றை எப்படி சுவாசிக்க முடியும்? என்று பலரும் யோசிக்கிறார்கள். ஆனால், மணவாழ்வின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இப்படி சொல்ல மாட்டார்கள். உலகவாழ்வை 'சம்சார சாகரம்'என்று சொல்வர். இந்த பிறவிக்கடலை நீந்தி கரை கடக்கவேண்டுமானால் துணை தேவைப்படுகிறது. அதனால் தான் மனைவியை 'வாழ்க்கைத் துணைநலம்' என்றார் வள்ளுவர். பெண்ணைக் கண்போல காப்பவன் என்பதாலே 'கணவன்' என்றனர். ஓருயிர் ஈருடல் என்பது போல, தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தால் மணவாழ்வு மகிழ்ச்சியான வாழ்வாக மலர்ந்திடும்.

புது நெல்லு! புது நாத்து!

புதுநெல்லை விதைநெல்லாக வயல்காட்டில் விதைப்பர். அந்த விதைகள் முளை விட்டு நாற்றானதும் வயலில் 'நாற்றுப் பாவுதல்' என்று நடவு செய்வர். இதே மாதிரி தான் ஒரு பெண்வாழ்வும். திருமணத்தை வடமொழியில் 'விவாகம்' என்று குறிப்பிடுவர். இதற்கு 'ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் பதியவைத்து, அந்த இடத்தை செழிக்கச் செய்வது' என்று பொருள். பெண்ணும் ஒரு குடும்பத்தில் பிறந்து மற்றொரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அக்குடும்பத்தின் சந்ததியை செழிக்கச் செய்கிறாள். திருமணம் பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதால் தான் தெய்வீகத் திருமணங்களைக் கூட 'மீனாட்சி கல்யாணம்; வள்ளி கல்யாணம்; சீதாகல்யாணம்' என்று பெண்ணின் பெயராலே குறிப்பிடுகிறோம்.

ஆரோக்கிய மணவாழ்க்கை:

திருமண காலத்தில், உடல்நலத்தை மணமக்கள் பாதுகாக்க வேண்டும். கிராமங்களில் திருமணம் பேசி முடித்தவுடன், மணமக்களை அதிகம் வெளியே விடாமல் இருப்பதன் முக்கியம் நோக்கம் இதுதான். இந்நேரங்களில் அனைவரது பார்வையும் மணமக்கள் மீதுதான் இருக்கும். அதனால் உடலில் காயமோ, வேறு ஏதாவது நோய்களோ ஏற்பட்டால் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். இதனால் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.திருமண சமயங்களில் தூக்கத்தை சரியான அளவில் வரையறுத்துக் கொள்ள வேண்டும். உணவு முறைகளிலும் கட்டுப்பாடு அவசியம். உடலுக்கு ஒவ்வாத உணவினை (விருப்ப உணவாக இருந்தாலும்) தவிர்க்க வேண்டும். சரியான நேரத்தில் அளவான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கடின உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். இதனால் உடலின் சுழற்சி முறை சீராக இருக்கும். ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.மணமக்கள் வீட்டில் திருமண வேலைகள் அதிகளவில் இருக்கும். பொதுவாக மணப்பெண்ணுக்கு எந்த வேலையும் இருக்காது. பணிக்கு செல்லும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பாதுகாப்பாக சென்று வந்தால் போதுமானது. சில வீடுகளில் மணமகன் அனைத்து வேலைகளிலும் ஈடுபட வேண்டியதிருக்கும். அப்போது கவனமுடன் இருக்க வேண்டும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். தனியாக எங்கும் செல்வதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களையோ, உறவினர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பெரியவர்கள் சொல்லும் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவதும் நல்ல பலனைத் தரும்.

திருமண தினத்தன்று...:

பொதுவாக திருமணம் பேசிய நாளிலிருந்து ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முகூர்த்தத்தின் போதும், அதற்கு முந்தைய நாளிலும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். சடங்குகள் அதிகம் உள்ள திருமண முறைகளில் மணமக்கள் அதிகம் சோர்வடைந்து விடுவர். உணவு முறைகளில் கட்டுப்பாடாக இருந்து, ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலுக்கு சக்தி மற்றும் புத்துணர்ச்சி தரும் ஜூஸ், இளநீர் ஆகியவற்றை அருந்தலாம். அப்போது தான் மணமேடையில் மணமக்கள் புத்துணர்வுடன் தெரிவர்.

காதுல காமாட்சி! கழுத்தில மீனாட்சி!

'கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்; கழுத்துக்கு அணிகலன் மாங்கல்யம்' என்பார்கள். மங்கலகழுத்தாக எப்போதும் திகழவேண்டும் என்பதால் குடும்பப்பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தை கழுத்திலும் இட்டுக் கொள்வர். கிராமங்களில் சுமங்கலி பெண்ணை, 'அவளுக்கென்ன ராஜாத்தி! காதுல காமாட்சி! கழுத்தில மீனாட்சின்னு என்னைக்கும் மகராசியா இருப்பா!' என்று வாழ்த்துவார்கள். இங்கு காமாட்சி என்பது தோடு, மூக்குத்தி போன்ற ஆபரணங்களையும், மீனாட்சி என்பது திருமாங்கல்யத்தையும் குறிக்கும்.

சாட்சியான அக்னி :

ஆயிரம் பேர் கூடிநின்று நடந்தாலும், திருமணம் அக்னிசாட்சியாக நடந்ததாகவே குறிப்பிடுவர். மணவறையில் தாலிகட்டியதும் தம்பதியர் அக்னி மூன்று முறை வலம் வருவர். அப்போது மணமகன், ''அக்னிதேவனே! உத்தமமான இந்தப் பெண்ணை உன்னருளால் மனைவியாகப் பெற்ற பாக்கியசாலி நான். இவளுடைய கைகளைப் பற்றியே உன்னை வலம் வருகிறேன். உன்னருளால் நாங்கள் என்றென்றும் இணைந்திருப்போம். நல்ல குழந்தைகள், செல்வம், புகழ் அனைத்தும் பெற்று பெருமையோடு வாழ்வோம். நோய், வறுமை, பாவம் எதுவும் எங்களை தாக்காமல் நேரியவழியில் நடப்போம். என்றென்றும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக. நீயே சாட்சி!'' காலம் காலமாக அக்னியை வலம் வரும் சடங்கு நடப்பதால் தான் 'அக்னி சாட்சியா நடந்த கல்யாணம்' என்ற சொல்லும் வழக்கம் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us