ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுங்கள்: மாயாவதி வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுங்கள்: மாயாவதி வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 07, 2024 06:50 PM
ADDED : ஜூலை 07, 2024 10:54 AM

சென்னை: பெரம்பூர் பள்ளி வளாகத்தில், வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, பெரம்பூர் பள்ளி வளாகத்தில் அவரது உடல் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று (ஜூலை 07) ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது உறவினர்களை சந்தித்து, மாயாவதி ஆறுதல் கூறினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பெரம்பூரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
பின்னர் மாயாவதி பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இன்னும் உண்மையான குற்றவாளியை பிடிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். அரசு தீவிரமாக செயல்பட்டு இருந்தால் உண்மையான குற்றவாளியை பிடித்திருக்கலாம்.
சி.பி.ஐ., விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
பாதுகாப்பு
பட்டியலின மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
திருவள்ளூரில் அடக்கம் செய்ய அனுமதி
ஆம்ஸ்டிராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு, அவரது மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பிரமணியன், திருவள்ளூர், செங்குன்றம் அருகே பொத்தூரில் ஆம்ஸ்டிராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்து கொள்ளலாம். இதற்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசு அனுமதியுடன் கட்டிக் கொள்ளலாம். கண்ணியமான முறையில் உடல் அடக்கம் செய்ய வேண்டும். நினைவிடம் அமைக்க விரும்பினால் அரசிடம் அனுமதி பெறலாம். சம்பந்தப்பட்ட இடத்தில் உடலை அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசு அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும். உடல் எடுத்து செல்லப்படும் 20 கி.மீ., தூரம் வரை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், இன்றே உடலை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
பொத்தூரில் உடலை அடக்கம் செய்ய மனுதாரர்கள் ஒப்புக் கொண்டனர்.