ADDED : பிப் 01, 2026 01:01 AM
சென்னை: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், கடந்த மாதம் 20ம் தேதி முதல் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சு நடத்திய நிலையில், தீர்வு ஏற்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் போராட்டத்திற்கு வருவோரை, போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைக்கின்றனர். மாலையில் விடுவித்ததும், சிலர் உறவினர் வீடுகளிலும், பலர் பஸ், ரயில் நிலையங்களிலும் இரவில் தங்குகின்றனர். மீண்டும் காலையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடியாது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆனாலும், போராட்டத்தை கைவிடாமல், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், நேற்று 12வது நாளாக சிந்தாதிரிப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், வழக்கம்போல் மண்டபத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து, பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், 'பலர் தங்குவதற்கு இடமில்லாமல், குளிரிலும், கொசுக்கடியிலும் அவதிப்பட்டு வருகிறோம். பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம்' என்றனர்.

