மருந்து உட்கொண்டும் பயனில்லை; 'குடி'மகன்களுக்காக சிறப்பு திட்டம்!
மருந்து உட்கொண்டும் பயனில்லை; 'குடி'மகன்களுக்காக சிறப்பு திட்டம்!
ADDED : செப் 24, 2024 07:22 AM
சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், சிகிச்சை பெறுவர்களில் பலர், மது, புகையிலை பயன்படுத்துவதால், நோய்கள் கட்டுப்பாட்டில் வராதது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், அவர்களுக்காக சிறப்பு திட்டத்தை, அரசு முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பயன்பெற்ற, 4,206 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், 56 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம்; 58.3 சதவீதம் பேருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தது.
மற்றவர்களுக்கு, புகையிலை, மது பழக்கம், உடல் பருமன் உள்ளிட்டவற்றால், நோய் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இவர்களுக்கு மருந்துகள் வழங்கினாலும், இணை நோய்கள் கட்டுப்பாட்டில் வராது.
எனவே, ஒவ்வொரு சுகாதார வட்டத்திலும், சமூக ஆதரவு குழுக்களை ஏற்படுத்த உள்ளோம். இணை நோயாளிகள் அனைவரையும் குழுவில் ஒருங்கிணைத்து, பரஸ்பரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஒத்துழைப்பு வழங்கப்படும்.
நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழிநடத்தவும், ஒருங்கிணைந்து உடற்பயிற்சி செய்யவும் வழிவகை செய்யப்படும்.
இந்த திட்டம் முதற்கட்டமாக, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஓராண்டுக்கு பின் ஆய்வு செய்யப்படும்.
அதில் கிடைக்கும் வெற்றிக்கு ஏற்ப, மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்படும். இதற்காக, தமிழக பொது சுகாதார துறையுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய நோய் பரவியல் நிறுவனம் கைகோர்த்து உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

