UPDATED : ஏப் 21, 2024 05:06 PM
ADDED : ஏப் 21, 2024 05:26 AM

மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று(ஏப்.,21) காலை 8:39 - 8:55க்குள் கோலாகலமாக நடந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.
நேற்று முன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அம்மன் மதுரையில் ஆட்சிபுரிந்தபோது நடந்த திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் நேற்று இரவு இந்திர விமானத்தில் அம்மனின் திக்கு விஜயம் நடந்தது.
இதைதொடர்ந்து இன்று(ஏப்.,21) திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய் பெருமாள் காலை 6:00 மணிக்கு மீனாட்சி கோயிலில் எழுந்தருளினார். கோயிலின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:00 மணிக்கு எழுந்தருளினர்.
இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டது. 12 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதி சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரூ.500 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகேயுள்ள வழியாக வடக்கு கோபுரத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. அன்று மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,23 அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். இதையொட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

