வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் 'அப்டேட்'
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் 'அப்டேட்'
UPDATED : நவ 23, 2024 01:03 PM
ADDED : நவ 23, 2024 06:45 AM

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் வங்கக்கடலிலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால், இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வரும் 25ம் தேதி, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
பின், 26 முதல் 28ம் தேதி வரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, ராமநாதபுரம் மற்றும் திருச்செந்துாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளில் 5; ராமேஸ்வரத்தில் 4; பாம்பனில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.