நிரம்பியது மேட்டூர் அணை; இந்தாண்டில் மூன்றாம் முறை!
நிரம்பியது மேட்டூர் அணை; இந்தாண்டில் மூன்றாம் முறை!
UPDATED : ஜன 01, 2025 12:08 AM
ADDED : டிச 31, 2024 10:31 PM

சேலம்: நடப்பாண்டில் மூன்றாம் முறையாக மேட்டூர் அணை, நேற்று (டிச.,31) இரவு 10 மணிக்கு முழு கொள்ளளவை எட்டியது. அணையின் வரலாற்றில், டிசம்பர் மாதம், முழு கொள்ளளவை எட்டியிருப்பது, இது மூன்றாம் முறையாகும்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த ஜூலை, 30ல் அணை, 120 அடியான முழு கொள்ளளவை எட்டியது. மீண்டும் ஆக.,12ல், 2வது முறை, 120 அடியை எட்டியது. அதன் பின் நீர்வரத்து சரிந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த அக்.,18ல் அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது.
இந்நிலையில், 133 நாட்களுக்குப் பின்பு நேற்று (டிச.,31) இரவு 10 மணியளவில் நடப்பாண்டில் 3வது முறையாக அணை நிரம்பியது. மேட்டூர் அணையின் வரலாற்றில் டிசம்பர் மாதத்தில் அணை நிரம்பியிருப்பது இது மூன்றாம் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 1972ம் ஆண்டு டிச.,13ம் தேதியும், 1997ம் ஆண்டு டிச.,10ம் தேதியும் மேட்டூர் அணை முழு கொள்அளவை எட்டியுள்ளது. முன்னதாக இன்று காலை அணையை பார்வையிட்ட நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன் குமார், 'நீர்வரத்து குறைவாக இருப்பதால் உபரிநீர் திறக்க வாய்ப்பில்லை' என்றார்.
நீர்வரத்து 2875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இரவு 11 மணிக்கு 500 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.