நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு அதிகரிக்க அமைச்சர் அறிவுரை
நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு அதிகரிக்க அமைச்சர் அறிவுரை
ADDED : நவ 26, 2025 12:23 AM

சென்னை: “தொழிலாளர் நல வாரியத்தில், அதிக அளவில் தொழிலாளர்கள் பதிவு செய்ய வேண்டும்,” என, அமைச்சர் கணேசன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தின், 10வது வாரிய கூட்டம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் எட்டாவது கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில், சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கே முன்னோடியாக, தமிழகத்தில் பல்வேறு வாரியங்களை உருவாக்கி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
தற்போது, 29 சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு சட்ட தொகுப்புகளாக மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதனால், கருணாநிதியால் உருவாக்கப்பட்ட வாரியங்களின் செயல்பாடுகள் என்னவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 2 லட்சத்து 10,419 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 2 லட்சத்து 55,676 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நல வாரியத்தில், தொழிலாளர்களை அதிகளவு பதிவு செய்ய வேண்டும்.
பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, விரைவாக நலத்திட்ட உதவித் தொகைகள் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

