அமைச்சர் பெரியசாமிக்கு விரைவில் பதில்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
அமைச்சர் பெரியசாமிக்கு விரைவில் பதில்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
UPDATED : ஜன 12, 2026 07:08 AM
ADDED : ஜன 12, 2026 06:24 AM

சென்னை: “ஆட்சியில் பங்கு கிடையாது என அமைச்சர் பெரியசாமி கூறியதற்கு, விரைவில் பதில் அளிக்கப்படும்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பாதுகாக்கக்கோரி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை, காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வருகிறது. இறுதியாக, பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். 10,000க்கும் மேற்பட்ட தமிழக மக்களை ஒன்று திரட்டி, பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்,” என்றார்.
உண்ணாவிரதத்தை தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் முடித்து வைத்தார்.
அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆட்சியில் பங்கில்லை என்று தெரிவித்த அமைச்சர் பெரியசாமிக்கு, விரைவில் பதில் அளிக்கப்படும். கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். அதை மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மண்வெட்டி, கடப்பாரை, சாந்து சட்டி போன்றவற்றை எடுத்து வந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

