வார்டு மறுசீரமைப்பு முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
வார்டு மறுசீரமைப்பு முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
ADDED : ஜன 11, 2025 11:54 PM

சென்னை:''வார்டுகள் மறுசீரமைப்பு முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, அமைச்சர் பெரியசாமி கூறினார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் சட்ட மசோதாவை, அமைச்சர் பெரியசாமி அறிமுகம் செய்தார். அதன் மீது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அன்பழகன்: வார்டுகள் மறுசீரமைக்க அதிக அவகாசம் தேவைப்படுகிறது என, தனி அலுவலர்கள் நியமனத்திற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம், தி.மு.க., அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது.
உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அப்படி மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியம். தனி அலுவலர் நியமனம், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எனவே, உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
பா.ம.க., - ஜி.கே.மணி: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், ஜனவரி, 5ம் தேதியே முடிந்தது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவதை, பா.ம.க., எதிர்க்கிறது.
வார்டுகள் மறுவரையறையை உள்நோக்கம் இல்லாமல் முறைப்படி நடத்த வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல், வெளிப்படைத் தன்மையுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் - நாகை மாலி: உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். மாவட்ட ஊராட்சிக்கு என்ன அதிகாரம் என்றே தெரியவில்லை. அதுகுறித்து அரசு முடிவு செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன்: உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. வார்டுகள் மறுசீரமைப்பின் போது, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்.
அமைச்சர் பெரியசாமி: உள்ளாட்சி தேர்தலை நடத்த, தி.மு.க., அரசு எப்போதும் தயாராக உள்ளது. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊராட்சிகள் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள், வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. அதனால் தான், தனி அலுவலர்களை நியமிக்கப்படுகின்றனர். மறுசீரமைப்பு முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.