ADDED : பிப் 08, 2024 02:35 AM
சென்னை:பொங்கல் தொகுப்பில் 'பாலியஸ்டர்' நுாலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளதாக தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவு தொழிலாளர்களிடம் வேட்டி புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் 'கமிஷன் காந்தி' என்று அழைக்கப்படும் அவர் பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி - சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்.
வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நுால் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தாண்டு பருத்தி நுால் குறைவாகவும் 'பாலியஸ்டர்' நுால் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நுாலை வாங்காமல் அதில் பாதி விலையான ரூ.160க்கு கிடைக்கும் பாலியஸ்டர் நுாலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
அதில் ஒரு வேட்டியை கோவை ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டரும்; வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

