அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை
அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை
ADDED : மே 04, 2025 02:24 AM

புதுக்கோட்டை:'எங்கள் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறிய கருத்து மன வருத்தத்தை அளிக்கிறது' என, அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே, 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நெல்லை உட்பட தமிழகம் முழுதும் நேற்று போராட்டம் நடந்தது.
இந்நிலையில், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், 'இந்த போராட்டம் சட்டவிரோதம். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் நலன் கருதி, போராட்டத்தை அங்கன்வாடி பணியாளர்கள் கைவிட வேண்டும்' என, எச்சரித்திருந்தார்.
நேற்று புதுக்கோட்டையில், அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், 'சமூகநலத்துறை அமைச்சர் கூறிய கருத்து, எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி என, அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது.
வெயில் காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ள வேளையில், அங்கன்வாடிக்கு மட்டும் விடுமுறை அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று, ஒரு மாதம் விடுமுறையை வழங்க வேண்டும்' என்றனர்.

