அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உத்தரவு
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உத்தரவு
UPDATED : ஆக 07, 2024 11:58 AM
ADDED : ஆக 07, 2024 10:50 AM

சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், இன்று (ஆக.,7) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தங்கம் தென்னரசு மற்றும் ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்த கீழமை நீதிமன்றங்களின் உத்தரவை ரத்து செய்ததுடன், அவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.