சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி
ADDED : ஜன 29, 2026 09:15 PM

சென்னை : 'சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தவறிழைத்த காவல் துறை அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு அரசு துடிப்பது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கடந்த 2024ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இழப்பீடு கோரியும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தைப் பின்பற்றாமல் தவறிழைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பில், 'சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'குற்ற வழக்குப் பதிவு செய்வது வேறு; துறை ரீதியான நடவடிக்கை என்பது வேறு' என்றனர். அதற்கு, 'சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த 2024ம் ஆண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சட்டத்தை காப்பாற்ற வேண்டிய போலீசாரே, போக்சோ சட்ட விதிமுறைகளை மீறியுள்ளனர்.இந்த சட்ட நடைமுறைகள் குறித்து, காவல் துறையினருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. தவறிழைத்த அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்வது தண்டனை அல்ல. தவறிழைத்த அதிகாரிகளை காப்பாற்ற அரசு துடிப்பது ஏன்?இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து, காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

