அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் : ஆசிரியர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் : ஆசிரியர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 12, 2011 12:25 AM
திண்டிவனம் : மயிலம் அருகே, பள்ளி மாணவியை, ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரால், பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம் காட்டுச்சிவிரியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, திண்டிவனத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பள்ளியில் மாலை நேர டியூஷன் நடத்தி வந்துள்ளார். இவரிடம் டியூஷன் படித்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி, 15, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோர் அவருக்கு சூடு வைத்துள்ளனர். இதனால் கதறித் துடித்த செல்வி, பள்ளியில் டியூஷன் நடத்தி வரும் ஆசிரியர் ரவிச்சந்திரன், தன்னை தனிமையில் அழைத்து பலாத்காரம் செய்ததைக் கூறி கதறி அழுதார். இதனால் ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர், கடந்த 26ம் தேதி பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் ரவிச்சந்திரனை தாக்கியுள்ளனர். மற்ற ஆசிரியர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இதையடுத்து, புதூர் கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவியர் மாற்றுச் சான்றிதழ் பெற்று, வெள்ளிமேடுப்பேட்டை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் ரவிச்சந்திரன் திடீரென 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, ரோஷணை இன்ஸ்பெக்டர் அறிவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் ஆகியோர் நேற்று காலை பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.