திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை
திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 12:34 AM
சென்னை:'மாற்றுத்திறனாளிகளை போல, திருநங்கையரையும் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விருத்தாசலம் தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் அவர் பேசியது:
உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளை, நியமன கவுன்சிலர்களாக நியமிக்க, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்கது.
அதுபோல, திருநங்கையரையும் நியமன கவுன்சிலர்களாக நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அதை செயல்படுத்த வேண்டும்.
விருத்தாசலம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் உள்ளது. அதை தமிழில் 'திருமுதுகுன்றம்' என்று பெயர் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.