ADDED : ஜூலை 06, 2026 12:50 AM

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 8.2 செ.மீ., மழை பெய்துள்ளது. அதேபோல, அதிகபட்ச வெப்ப நிலையாக மதுரையில், 98.6 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
தற்போது, தெற்கு குஜராத்தில் இருந்து கேரளம் வரை, கடலில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று, மணிக்கு 40 - 50 கி.மீ., வேக காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, கோவை, நீலகிரி மாவட்டங்களில், கனமழை பெய்யலாம். இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிஷா - மேற்கு வங்க கடலோர பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது.
இது, இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஷா கடலோரத்தில், சந்த்பாலி - பாலசோருக்கு அருகே கரையை கடக்கலாம்.
மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஷா, வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
