ADDED : ஜூன் 13, 2026 02:25 AM

சென்னை; 'தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் வழியே, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களின் உள் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் பொதுவாக, மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
