அரசு மருத்துவமனையில் நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை; ஏழை நோயாளிக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை
அரசு மருத்துவமனையில் நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை; ஏழை நோயாளிக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை
ADDED : பிப் 06, 2025 09:11 AM

கோவை: அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக, கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறையில், 'கார்டியாக் ரீசின்க்ரோனைசேஷன் தெரபி டிபிரிலேட்டர்' என்னும், நவீன பேஸ்மேக்கர் இதய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த, 54 வயதான சரவணக்குமார் என்பவர், 'வென்ட்ரிகுலர் டாக்கிகார்டியா' எனப்படும், சீரற்ற இதயதுடிப்பு காரணமாக, கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக ஷாக் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.
இவர், சீரற்ற இதய துடிப்பு காரணமாக, பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தியும், சீரற்ற இதய துடிப்பு மற்றும் இதய செயலிழப்போடு, அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், 'சி.ஆர்.டி.,-டி' எனப்படும் நவீன பேஸ்மேக்கரை, டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: 'சி.ஆர்.டி.,-டி' சிகிச்சை என்பது, இதய துடிப்பை முறைப்படுத்தும் கருவியை, மார்பு பகுதியில் வைப்பதாகும். இக்கருவி, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், திடீர் இதய மரணம் ஏற்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கானது.
இக்கருவி, அசாதாரணமான இதய துடிப்புகளை ஆபத்தான வேகத்தில் உணர்ந்தால், இதயத்திற்கு ஒரு சிறிய அளவிலான மின்சார அதிர்வை வழங்குகிறது. இந்த அதிர்வு, இச்சிக்கல்களை சரிசெய்யும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில், முதன்முறையாக கோவையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட நபர் நலமுடன் உள்ளார். தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இருதயத்துறை தலைவர் நம்பிராஜன், மருத்துவர்கள் சக்கரவர்த்தி, ஜெகதிஷ், செந்தில், சதிஸ்குமார், மணிகண்டன் ஆகியோர், இந்த சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.