UPDATED : மே 31, 2024 05:06 PM
ADDED : மே 30, 2024 11:22 PM

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்று இரவு துவங்கினார். இதையொட்டி, குமரி முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட மோடி, நேற்று மாலை 5:06 மணிக்கு கன்னியாகுமரி அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு வந்தார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். 5:40க்கு அங்கிருந்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
வரவேற்றனர்
கோவிலை, 20 நிமிடங்கள் வலம் வந்து, தேவியை தரிசனம் செய்தார். பின், 6:05க்கு காரில் படகு தளத்துக்கு சென்றார். அவர் பயணித்த படகு, விவேகானந்தர் பாறைக்கு மாலை 6:15க்கு சென்றடைந்தது. விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர்.
அங்குள்ள மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு, 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அறையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் தங்கவும், மற்றொன்று பிரதமருக்கு உணவு தயாரிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் வந்திறங்கியது முதல் பாறைக்கு செல்லும் வரை, கடற்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இரண்டு கப்பல்கள் மற்றும் 10 அதிநவீன படகுகளில், கடலோர காவல் படையினர் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் முகாமிட்டு, பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணியரை தடுக்க வேண்டாம் என, பிரதமர் அலுவலகம் கூறியிருந்தாலும், நேற்று காலை 11:00 மணிக்கு பின் படகுகள் இயக்கப்படவில்லை. கோவில் மற்றும் படகு தளத்துக்கு செல்லும் சாலைகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பிரதமர் மோடியின் வருகை முழுக்க முழுக்க தனிநபர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதால், செய்தியாளர்கள் உட்பட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு, பல்வேறு ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
அனுமதிக்கவில்லை
எவரும் வர வேண்டாம் என்று டில்லியில் இருந்து கூறப்பட்டதால், அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வந்த போது அவரையும் அனுமதிக்கவில்லை.
விவேகானந்தர் பாறை யை சுற்றி, நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி படை, கப்பல் படை, தமிழக போலீசார் பணியில் உள்ளனர்.
சர்வதேச அளவில் பெயர் பெற்ற பல்வேறு திறன்களை உடைய மார்க்கோஸ் என்ற கடல் செயல்வீரர் படையைச் சேர்ந்த 30 வீரர்கள், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கடற்படையின் துணை ராணுவ அமைப்பான கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள், 164 வீரர்களுடன் கன்னியாகுமரியில் இருந்து, 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன.
நான்கு டி.ஐ.ஜி.,க்கள், 10 எஸ்.பி.க்கள் உட்பட, 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பிரதமர் செல்லும் பாதைகளில், ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று முதல் ஜூன் 1ம் தேதி மதியம் வரை விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ளும் பிரதமர், அன்று மாலை 3:00க்கு திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கி விட்டு கரை திரும்புகிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.