மத்தியில் மோடி ஆட்சி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு
மத்தியில் மோடி ஆட்சி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு
UPDATED : டிச 05, 2024 08:10 PM
ADDED : டிச 05, 2024 06:19 PM

மயிலாடுதுறை: மத்தியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி வேண்டும் என மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், திமுக ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 34 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால் இது ஆன்மீக ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன ஆட்சி என்று சொல்ல முடியும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ள 64 தங்க ரதங்களும், 84 வெள்ளி ரதங்களும் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு வீதி உலா வருகிறது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட ஐந்து தங்க ரதங்களில் பெரியபாளையம் திருக்கோயிலில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கரதம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 வெள்ளி ரதங்களில் திருத்தணி முருகனுக்கு சொந்தமான வெள்ளி ரதம் முழுமையாக கட்டமைக்கப்பட்டு பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மட்டுமல்லாமல் தேர்கள், திருக்கொட்டகைகள் உருவாக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. தருமபுரம் ஆதீனம் திமுக ஆட்சியில் தக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலை துறை ஒத்துழைப்பு நல்கும் என்றார்.
மத்தியில் மோடி ஆட்சி
பின்னர் மதுரை ஆதீனம் பேசுகையில், தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது.
தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம், பல்வேறு புலவர்களை உருவாக்கியுள்ளது. முனைவர்களாக உள்ளவர்களை படிக்க வைத்து ஆதீன புலவர்கள் ஆகவும் பண்பாளர்களாகவும் ஆக்கி உள்ளது தருமபுர ஆதீனம். அமைச்சருடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான் என்றார்.