மலேஷியா செல்கிறார் மோடி; தமிழர்களுடன் பேச ஏற்பாடு
மலேஷியா செல்கிறார் மோடி; தமிழர்களுடன் பேச ஏற்பாடு
ADDED : ஜன 28, 2026 05:05 AM

சென்னை: பிரதமர் மோடி, வரும் பிப்ரவரி 7ம் தேதி மலேஷியா செல்லும் நிலையில், அங்கு தமிழர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், அம்மாநில மக்களை ஈர்க்கும் வகையிலான முயற்சிகளை, பிரதமர் மோடி மேற்கொள்வார். கடந்த ஆண்டு நவம்பரில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
அதற்கு சில மாதங்களுக்கு முன், பீஹார் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும், டிரினிடாட் அண்டு டபேகோ நாட்டுக்கு பிரதமர் சென்றார். இந்திய வம்சாளியை சேர்ந்த அந்நாட்டு பிரதமரை, 'பீஹாரின் மகள்' என அழைத்தார்.
இது பீஹார் தேர்தலில் பேசுபொருளானது. வரும் ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி, வரும் பிப்ரவரி 7ம் தேதி மலேஷியா செல்கிறார்.
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில், இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் பிரமாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், அங்குள்ள தமிழர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய, பா.ஜ., ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதியிடம், பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார். இதற்காக அவர் நேற்று காலை, கோலாலம்பூர் சென்றார்.
பிரதமர் மோடியின் மலேஷிய பயணத்தில், அங்குள்ள தமிழர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். அங்குள்ள மாரியம்மன், முருகன் கோவில்களில் அவர் வழிபாடு நடத்த இருப்பதாகவும், பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மலேஷியா செல்வதை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'மலேஷியாவில், 500க்கும் அதிகமான தமிழ் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தமிழ் கற்பிக்கப்படுவதோடு, பிற விஷயங்களையும் கூட தமிழிலேயே கற்பிக்கின்றனர்' என்றார்.

