ADDED : டிச 20, 2025 07:29 AM

சென்னை: பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையிலும், பீஹாரை விட தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பீஹார் மாநிலத்திலும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்தன. அங்கு வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு முன், 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்படி, 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் துவங்கும் முன், 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 5.43 கோடி பேர் உள்ளனர்; 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீஹாரில் எஸ்.ஐ.ஆர்., பணியின் போது பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணியின்போது, வாக்காளர்களுக்கு பல வகைகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதையும் மீறி, பீஹாரை விட தமிழகத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

