UPDATED : ஜூன் 30, 2026 04:43 PM
ADDED : ஜூன் 30, 2026 02:46 PM

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
கரூர் எம்எல்ஏ ஆக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் என் மீது 43 பொய் வழக்குகள்சுமத்தப்பட்டன. தொண்டர்கள் மற்றும் என் குடும்பத்தினர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குடும்பத்தின் நிம்மதி போனது. கரூரில் செந்தில்பாலாஜியின் அதிகார மமதையை எதிர்த்து மீண்டும் அதிமுக கொடியை ஏற்றினேன். இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று பரிசாக எனது நெஞ்சில் ஈட்டி பாய்ந்துள்ளது.
தீய சக்திகளுடன் கைகோர்த்து அவர்களின் தயவில் ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதை கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. நமக்கு இப்படி ஒருஎண்ணம் வரலாமா தீயசக்தி என ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுக உடன் அதிமுக எப்படி கை கோர்க்க முடியும்.
இபிஎஸ் முன்மொழிந்த சமரச முடிவுக்கு தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவரின் தலைமைக்கு ஒரு போதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத் தான் அதிமுகவின் பொதுச்செயலராக முன் நிறுத்தினோம்.ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று இயக்கத்தை அழிவிலும் வேதனைனயிலும் நிறுத்தி உள்ளது.
இந்த நிலைப்பாட்டிற்கு பலியாக நானும், என்னுடன் பயணித்தவர்களும் தயாராக இல்லை.கட்சியில் இருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நேரலை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகுவது குறித்த செய்தி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட்டது.
இதனைக் காண: https://www.youtube.com/watch?v=et3GG2ndAlE
