ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்!
ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்!
UPDATED : டிச 07, 2024 10:45 PM
ADDED : டிச 07, 2024 07:43 PM

சென்னை: ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்த போது லஞ்சப்பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷாவை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி, அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
ஊட்டி - கோத்தகிரி சாலையில், தொட்டபெட்டா சந்திப்பில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜஹாங்கீர் பாஷாவின் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த, கணக்கில் வராத பணம், 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஒரு சில வாரங்களில் அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. லஞ்சம் வாங்கிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாமல் புதிய பணியிடம் ஒதுக்கியது ஏன் என சராமரியாக கேள்வி எழுப்ப துவங்கினர். நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்ப துவங்கினர்.
இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை முன்தேதியிட்டு(நவ.,29) சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.