'முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும்'
'முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும்'
ADDED : ஜூன் 16, 2025 04:25 AM

மதுரை: ''ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் அரசியல் பேசப்படாது,'' என, மதுரையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மதுரையில் ஜூன் 22 ல் மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலினை அழைக்க அனுமதி கேட்டோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனி சாமி, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், பா.ம.க., தலைவர் அன்புமணி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்து அமைப்புகள் நிகழ்ச்சியை நடத்துவதால், அரசியல் கலப்பு என யாரும் நினைக்கக்கூடாது. அரசியல் சாராது அனைவரும் மாநாட்டுக்கு வர வேண்டும்.
இம்மாநாடு அன்று மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும்.
மதசார்பற்ற நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்து மதத்தையும் சமமாக நடத்த வேண்டும் என்ற செய்தி மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டில் யாரும் அரசியல் பேச மாட்டர். முழுக்க பக்தி மாநாடாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- காடேஸ்வரா
சுப்பிரமணியம்,
மாநில தலைவர், ஹிந்து முன்னணி