நம்பிக்கைக்கு நாங்க தடையில்லை : முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி முதல்வர் பேச்சு
நம்பிக்கைக்கு நாங்க தடையில்லை : முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி முதல்வர் பேச்சு
UPDATED : ஆக 24, 2024 10:41 AM
ADDED : ஆக 24, 2024 10:21 AM

சென்னை: 'ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை' என அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார். பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க., வழங்கி வருகிறது. ஏழு முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆன்மிக சுற்றுலா
அறுபடை வீடுகளில் ரூ 689 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 69 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அறுபடை ஆன்மிக சுற்றுலா பயணத்திற்கு 713 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எல்லா கோவில்களிலும் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முருகன் கோவில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளர்ச்சி
திடீரென்று பழநியில் மாநாடு நடத்தவில்லை. பல்வேறு பணிகள் செய்த பிறகு தான் மாநாடு நடத்தப்படுகிறது. திருக்கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் அரசு. கோவில் வளர்ச்சிக்கும் அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் தி.மு.க., அரசு பணியாற்றி வருகிறது.
ரூ. 5,570 கோடி நிலங்கள் மீட்பு
அறநிலையத்துறையை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சாதனைகளுக்கு மகுடமாக பழனி முத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.