ஹிந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சட்டங்களின் பெயர்கள்: ஐகோர்ட் நீதிபதி
ஹிந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சட்டங்களின் பெயர்கள்: ஐகோர்ட் நீதிபதி
ADDED : ஜன 25, 2024 05:54 AM

சென்னை: தனக்கு ஹிந்தி தெரியாது என்பதால் மூன்று புதிய சட்டங்களின் பெயரையும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா பாரதிய சாக் ஷிய சன்ஹிதா என்ற பெயர்களில் புதிதாக சட்டங்கள் பார்லிமென்ட்டில் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்தப் புதிய சட்டங்கள் இன்னும் அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது.
ஒரு குற்ற வழக்கை விசாரணைக்கு எடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாக எழுப்பப்பட்ட சட்டப்பூர்வ கேள்விக்கு விடை காண வழக்கறிஞர்கள் உதவும்படி நீதிபதி கேட்டார்.
நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் வழக்கறிஞர்கள் திருவேங்கடம் முகமது ரியாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தெரிவித்தனர்.
அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் புதிய சட்டத்தை பார்க்கும்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தை குறிப்பிட்டார். உடனே நீதிபதி புதிய சட்டத்தின் பெயர் என்ன என்று கேட்டபோது ஹிந்தி மொழியில் பெயர் மாற்றப்பட்ட சட்டத்தை உச்சரிப்பதற்கு அரசு வழக்கறிஞர் சிரமப்பட்டார்.
இதை கவனித்த நீதிபதி புத்திசாலித்தனமாக புதிய சட்டம் என அரசு வழக்கறிஞர் தெரிவித்து விட்டார் என்றார். அதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ''எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால் மூன்று குற்றவியல் சட்டங்களையும் ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன்'' என்றார்.