UPDATED : ஆக 20, 2011 09:50 AM
ADDED : ஆக 19, 2011 05:28 PM

திருநெல்வேலி:நெல்லை பல்கலையில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊழியர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் களப்பணியாளராக இருப்பவர் வெங்கடசாமி(55). இவர் பல்கலையில்நடக்கும் முறைகேடுகளை வெளியே கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுபவர்.டில்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தால் இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை பரவியுள்ள இச்சூழலில் நெல்லை பல்கலையில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்கும்படி நெல்லை பல்கலை முன்பாக திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் கூறுகையில், பல்கலை நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதாக கூறப்படுவதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது.நெல்லை பல்கலையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 33 ஆசிரியர்கள் முறையற்ற நியமனத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பல்கலையில் தொலை நெறி கல்வியில் பி.எட்.,சேர்க்கையில் 500 மாணவர்களுக்குபதிலாக 523 மாணவர்கள் சேர்த்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படியும், எம்.டெக் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை நிவர்த்திசெய்யும்படியும் கோரிக்கை விடுத்தார். அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதும் அங்குவந்த போலீசார் 'அதுதான் உங்களை பத்திரிகைகாரங்க படம் பிடிச்சாச்சுல்லா... உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளவேண்டியதுதானே.. எனகூறி அவரது உண்ணாவிரதததிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பல்கலை முன்பாக ஊழியர் ஒருவர் கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் மாணவ, மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.