ADDED : ஜூலை 02, 2023 03:29 AM

சென்னை--தர்மபுரி மாவட்டம், பூதிநத்தம் அகழாய்வில் புதிய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பூதிநத்தம் கிராமத்தில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்., முதல் அகழாய்வு செய்யப்படுகிறது. இதுவரை, 17 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
இவற்றில் இருந்து, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், நுால் நுாற்கும் தக்களி, பெண்கள் விளையாட பயன்படுத்தும் வட்டச்சில்லுகள், விலைமதிப்பற்ற மணிகள், சுடுமண் உருவங்கள் என, 50க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோடாரி
இவற்றை விட முக்கியமாக, வெவ்வேறு அகழாய்வு குழிகளில், வெவ்வேறு ஆழத்தில், புதிய கற்காலத்தை சேர்ந்த ஐந்து கற்கருவிகள் கிடைத்துள்ளன.
'சி 9' என்ற அகழாய்வு குழியில், 36 செ.மீ., ஆழத்தில், 22 செ.மீ., நீளம், மேல் பகுதி 17 செ.மீ., மற்றும் கீழ் பகுதி 7.74 செ.மீ., அகலமுடைய கூம்பு வடிவ கற்கருவி கிடைத்தது.
வாய்ப்பு
அதேபோல, 'டி 9' அகழாய்வு குழியில், ஒரு கூம்பு வடிவ, 'டோலாரய்டு' கல் வகையை சேர்ந்த கற்கருவி கிடைத்து உள்ளது.
இந்த கருவியின் முனை மழுங்கியும், உடைந்தும் உள்ளது. இதை மரத்தை வெட்டவோ, விலங்குகளை வேட்டையாடவோ, ஏர் உழவு செய்யும் கருவியாகவோ அல்லது கோடாரியாகவோ பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது.
பூதிநத்தத்தில், புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கருவிகளும், இடைக்காலம் மற்றும் வரலாற்று தொடக்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைப்பதால், இங்கு வரலாற்று தொடக்க காலத்திலும், கற்கருவிகள் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது.
அகழாய்வை விரிவுபடுத்தும் போது, வரலாற்று தொடக்க காலம் மற்றும் கற்காலம் முடிவு குறித்த காலத்தெளிவு கிடைக்கும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
