முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு புது அறிவுரை
முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு புது அறிவுரை
ADDED : ஜன 18, 2024 12:42 AM
சென்னை:முதுநிலை மருத்துவ படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் தினமும் 60 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என, தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தர நிர்ணய கட்டுப்பாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மருத்துவ படிப்புகளை வழங்கும் கல்லுாரிகள், பல்கலை அனுமதி, அங்கீகாரத்தை ஆணையம் உறுதி செய்கிறது.
இதுகுறித்து, ஆணைய முதுநிலை கல்வி வாரிய செயலர் அஜேந்தர் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினமும் குறைந்தது 60 பேருக்கு சிகிச்சை வழங்கியிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்நோயாளிகள் பிரிவில் குறைந்தது, 75 சதவீத படுக்கையாவது நிரம்பியிருத்தல் அவசியம்.
பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு அறுவை அரங்குகளிலும், ஆய்வகங்களிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிப்பது முக்கியம்.
அதேபோல், போதிய எண்ணிக்கையில் மருத்துவ பேராசிரியர்களை நியமித்திருக்க வேண்டும். மேலும், மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகளில் கேமரா, இணைய கட்டமைப்பு, பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றை முறையாக பராமரித்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.