சர்வே எண், பட்டா விபரம் அறிய விரைவில் வருகிறது புதிய செயலி
சர்வே எண், பட்டா விபரம் அறிய விரைவில் வருகிறது புதிய செயலி
UPDATED : ஏப் 17, 2025 03:13 AM
ADDED : ஏப் 17, 2025 01:22 AM

சென்னை:நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் நேரடியாக பார்க்கும் ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களை சரியாக கூறுவது எளிதல்ல. வருவாய் துறையின் ஆவணங்களை கையில் வைத்து இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இது தானா என்பதை, தெளிவாக கூறுவது எளிதல்ல.
தற்போது, 'ஸ்மார்ட் போன்'களில் உள்ள ஜி.பி.எஸ்., புவியிட தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
உணவு உள்ளிட்ட பொருட்களை, 'டெலிவரி' செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, யார் எந்த இடத்தில் இருந்தாலும், மொபைல் போனில், 'லைவ் லொகேஷன்' பகிர்வதன் வாயிலாக, சரியான இருப்பிடத்தை அறிய முடிகிறது. இதை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விபரங்ளை மக்கள் அறிய, புதிய வசதியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், 'Tamilnilam Gioinfo' என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனரோ, அந்த இடத்தின், 'கூகுள்' வரைபடத்துடன், சர்வே எண் விபரங்கள் திரையில் வந்து விடும்.
இதில், திரையை தேவைக்கு ஏற்ப பெரிதாக்கி பார்த்தால், தங்களுக்கு தேவையான நிலத்தின் சர்வே எண் விபரங்களை துல்லியமாக அறியலாம். தற்போதைய நிலவரப்படி, பிரதான சர்வே எண்களை, இதில் அறிய முடியும்.
இதில், நீங்கள் ஏதாவது ஒரு பகுதியை குறிப்பிட்டு, அதன், 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்றவற்றை அறியும் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.
தொழில்நுட்ப ரீதியாக அனைத்து பணிகளும் முடியும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தலாம்.
அடுத்த சில மாதங்களில், இந்த செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதை மக்கள் பயன்படுத்த துவங்கி விட்டால், வீடு, மனை வாங்கும்போது, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, மக்களே எளிதாக சரிபார்க்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.