ADDED : ஆக 19, 2011 09:22 PM

திருப்பூர் : ''ஊழலை ஒழிக்க கறாரான சட்டத்தை இயற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் கூறியதாவது: இந்திய அரசியலில் குழப்ப நிலையும், பொருளாதாரத்தில் நெருக்கடியும் நீடிக்கிறது. மத்திய அரசின் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. ஊழல் மிகப்பெரிய கவலை தரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் உள்ளது. ஊழலை மேலும் வளர விடாமல் தடுக்க வேண்டும்; அதற்கு ஊழல் செய்வோரை சட்டத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
அன்னா ஹசாரேவை கைது செய்கின்றனர். ஊழலுக்கு எதிராக போராடும் அவர்களையும் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டும் மத்திய அரசு, அப்படிபட்ட ஊழலை ஒழிக்க கறாரான சட்டத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்; கறாரான சட்டம் மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும். பிற நாடுகளில் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுகின்றனர். ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கங்களை இந்திய கம்யூ., கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன், ஊழலை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்வதை கண்டிக்கிறது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து, மாற்றாட்சி காணும் விதமாக இயக்கத்தை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த இந்திய கம்யூ.,கட்சி தீவிரமாக பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.