மருத்துவமனை, கல்வி நிறுவனம், அலுவலகம் கட்டட உரிமம் வழங்க புதிய விதிகள் அமல்
மருத்துவமனை, கல்வி நிறுவனம், அலுவலகம் கட்டட உரிமம் வழங்க புதிய விதிகள் அமல்
ADDED : மே 31, 2025 04:22 AM

சென்னை: கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள், அலுவலகங்கள் போன்ற கட்டடங்கள், பொது கட்டடங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டடங்கள் கட்டும்போது, வழக்கமான நடைமுறையில் கட்டட அனுமதி பெற வேண்டும்.
அத்துடன், பொது கட்டடம் என்பதற்கான உரிமத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும் பெற வேண்டும். இதற்காக, 1966ம் ஆண்டு பொது கட்டடங்கள் உரிம விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதுதொடர்பான மசோதா, கடந்த ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருத்தங்கள் என்ன?
இதுவரை, 'மேனுவல்' முறையில் இருந்த பொது கட்டட உரிமம் பெறும் நடைமுறை, தற்போது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது
கட்டடத்தின் உறுதித்தன்மையை சரிபார்த்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்; அதில், கூடுதல் விபரங்கள் அறிய, கியூ.ஆர்., குறியீடு சேர்க்கப்படும்
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மின்னணு முறையில் உரிமத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும்
விண்ணப்பங்களை புதுப்பிக்கும் பணிகளும், ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளப்படும்
புதிய விதிகளின்படி உரிமம் வழங்க, கட்டடங்களின் உறுதித்தன்மை அறிவியல்பூர்வமாக ஆராயப்படும். இதற்காக, பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்
இதற்காக, 10,000 சதுர அடிக்குள் வருபவை; 10,000 சதுர அடிக்கு மேற்பட்டவை; 18.3 அடி உயரத்திற்கு மேற்பட்டவை என, பொது கட்டடங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
இந்த ஒவ்வொரு பிரி வுக்கு உட்பட்ட கட்டடங்களை யார் ஆய்வு செய்ய வேண்டும்; அவருக்கான கல்வி தகுதி என்ன என்பதும் வரையறுக்கப்பட்டு உள்ளது
அது மட்டுமல்லாது, கட்டடத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்களை, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும்
கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் சான்றளிக்க வேண்டும்
இதில், 18.3 அடி உயரத்திற்கு மேல் உள்ள கட்டங்களுக்கு உரிமம் பெற, 10,000 ரூபாய்; 10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு, 5,000 ரூபாய்; 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, 3,000 ரூபாய் என, கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன
மேல்முறையீட்டுக்கு, 1,000 ரூபாய்; பொறியாளர் குழுவில் பதிவு செய்ய விண்ணப்பிப்போருக்கு, 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதற்கான மாதிரி விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.