போதைப்பொருள் விற்பனையை தடுக்க புதிய தொழில்நுட்பம்; தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி
போதைப்பொருள் விற்பனையை தடுக்க புதிய தொழில்நுட்பம்; தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி
ADDED : ஜன 06, 2026 03:54 AM

மதுரை: ''கந்துவட்டி, மணல்கொள்ளை, பொருளாதார மோசடி, பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். போதைப்பொருள் விற்பனையை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்,'' என, மதுரையில் தென்மண்டல ஐ.ஜி.,யாக பொறுப்பேற்ற விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தென்மாவட்டங்களுக்கு சென்று டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுடன் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி உள்ளிட்ட புகார்களை விசாரிக்க சிறப்பு முகாம் நடத்தப்படும். முந்தைய ஐ.ஜி.,க்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்கள் மீதான வன்கொடுமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். சைபர்கிரைம், பொருளாதார மோசடி போன்ற புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். 'போதையில்லா தமிழ்நாடு' என்ற அடிப்படையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் போலீஸ் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை குறைத்து முன்மாதிரி ஸ்டேஷனாக மாற்றப்படும். சட்டத்தை மீறி செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் டி.ஐ.ஜி.,க்கள் மதுரை அபிநவ்குமார், திண்டுக்கல் சாமிநாதன், ராமநாதபுரம் தேஷ்முக் சேகர், நெல்லை சரவணன், நெல்லை கமிஷனர் மணிவண்ணன், மதுரை எஸ்.பி., அரவிந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

