தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்காக உருவாகும் பிரமாண்டமான தேர் : இரண்டு மாதத்தில் வெள்ளோட்டம் விட ஏற்பாடு
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்காக உருவாகும் பிரமாண்டமான தேர் : இரண்டு மாதத்தில் வெள்ளோட்டம் விட ஏற்பாடு
ADDED : ஜூலை 27, 2014 02:01 AM

தஞ்சாவூர் : தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு, பிரமாண்டமான தேர் செய்யும் பணி, இரண்டு மாதத்தில் முடிவடைந்து, வெள்ளோட்டம் நடக்க உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் தேர் திருவிழா, 19ம் நூற்றாண்டு வரை, மிகச் சிறப்பாக நடந்தது. மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்ட தேரோட்டம், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகத் திருத்தேர் செய்யப்படும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில், தஞ்சாவூர் மேல வீதி கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில், தேர் செய்வதற்கான பூர்வாங்க பணி துவங்கியது. இதை தொடர்ந்து தேர் கட்டுமானப் பணி, காமாட்சி அம்மன் கோவிலுக்கு எதிர்புறம், டிசம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது. இரண்டு கட்ட பணி முடிவடைந்து, தற்போது, இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடைந்து, இரண்டு மாதத்தில், தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து ஸ்தபதி வரதராஜன் கூறியதாவது: மொததம், 16.5 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள தேரில், பலகை மட்டம், பன்னிரெண்டே கால் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, இரண்டரை அடி உயரத்தில், தேவாசன மட்டம் (நடைபாதை) அமைக்கும் பணியும், இந்த மட்டத்திலிருந்து, இரண்டே கால் அடி உயரத்தில் சிம்மாசன மட்டமும் (ஸ்வாமி பீடம்) அமைக்கப்படவுள்ளது.மேலும், தேரில் பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிட்டசாணமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி உட்பட பல்வேறு சிற்பங்கள் மற்றும் நான்கு திசைகளிலும் குதிரை மற்றும் யாளி உருவங்கள் பொருத்தப்படுகின்றன. இதில், முதல் படிநிலையில் ஒன்றரை அடியில், 67 மரச்சிற்பம், இரண்டாம் படிநிலையில், இரண்டேகால் அடியில், 67 சிற்பம் என மொத்தம், 360 சிற்பம் இடம் பெறவுள்ளது. தேரின் முன்பக்கம், ஐந்தரை அடியில், கைலாசநாதர் கைலாய காட்சி சிற்பம், பின்புறம், அதே அளவில் நந்தி மண்டபத்துடன் கூடிய, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிற்பம் பதிக்கப்படுகிறது. இந்த தேருக்கான இரும்பு சக்கரம், இரும்பு அச்சு ஆகியவை, திருச்சி, பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்) நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படவுள்ளது. இந்த சக்கரங்கள் தலா, 6.5 அடி உயரத்திலும், அச்சு, 14.5 அடி நீளத்திலும் உருவாக்கப்படவுள்ளது. தேர் செய்ய, 1,150 டன் இலுப்பை மரம், 20 டன் தேக்கு, அரை டன் இரும்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த தேரின் மொத்த எடை, 6 டன். தற்போது, இறுதி கட்டப்பணி நடந்து வருவதால் விரைவில், தேர் பணி முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.