UPDATED : டிச 05, 2016 12:18 PM
ADDED : டிச 05, 2016 10:59 AM

சென்னை: இதயத்திற்கு, ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில், அடைப்பு ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைபடும். இது, மாரடைப்புக்கு வழி வகுத்து விடுகிறது. ரத்த நாள அடைப்பை, அறுவைச் சிகிச்சை இன்றி சரி செய்ய, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடையின் நரம்பு வழியாக, கதீட்டர் கம்பி வழியாக, 'ஸ்டென்ட்' என்ற விரியக்கூடிய உலோக வலை அனுப்பப்படும். அடைப்பு ஏற்பட்ட பகுதியில் வைத்து, 'ஸ்டென்ட்' விரிவடைய செய்யப்படும். இதனால், அடைப்பு நீங்கி, ரத்த ஓட்டம் சீரடையும்.
'ஆஞ்சியோஜெட்திராம்பெக்டமி' சிகிச்சை
இதயத்திற்கு செல்லும் ரத்த நாள அடைப்பை நீக்க, 'ஸ்டென்ட்' பொருத்தும் வழிமுறையை, சிறு மாற்றத்துடன் செய்வது, 'ஆஞ்சியோஜெட் திரம்பெக்டமி' எனப்படுகிறது. இதற்காக, தயாரிக்கப்பட்ட வளை கம்பியின் முனையில், இரண்டு பம்புகள் இணைக்கப் பட்டுள்ளன. இதை, நோயாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக, கணினி உதவியுடன், இதயத்தின் அடைபட்ட ரத்தக்குழாய்க்கு அனுப்புவர்.
அங்கு சென்றதும், இதய ரத்தக்குழாயை அடைத்திருக்கிற ரத்தக் கட்டியின்மீது, 'சலைன்' எனும் திரவத்தை பல மடங்கு அழுத்தத்தில், ஒரு பம்ப் பீய்ச்சியடிக்கும். அப்போது அந்த இடத்தில், வெற்றிடம் உருவாகும்.
இதன் பலனால், ஒரு வெடிகுண்டு வெடித்து சிதறுவதுபோல, அந்த ரத்தக்கட்டி சிதறி தூளாகும். இதைத் தொடர்ந்து, வளைகம்பி முனையில் உள்ள அடுத்த பம்ப் இத்துகள்களை ஒன்றுவிடாமல் உறிஞ்சிக்கொள்ளும். இதனால், ரத்தக்குழாயின் அடைப்பு, 100 சதவீதம் துப்புரவாகவும் துல்லியமாகவும் நீக்கப்படுகிறது; மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகும்.
இந்த சிகிச்சைக்கு பின், இதய ரத்தக்குழாயில், ஸ்டென்ட் பொருத்தப்படுவதில்லை. ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பின், மாரடைப்பு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ளலாம். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான பணிகளை செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இதயத்தில், எவ்வித செயற்கைத் துணைப்பொருளும் பொருத்தப்படாமல் இயற்கை வழியில் இதயம் இயங்க இது வழிவகுக்கிறது; கடுமையான மாரடைப்பு வந்தவருக்கும் இந்த சிகிச்சை பலன் தரும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
