இடைத்தேர்தல் பிரசாரம் : அமைச்சர்கள் மீது அதிருப்தி
இடைத்தேர்தல் பிரசாரம் : அமைச்சர்கள் மீது அதிருப்தி
ADDED : டிச 15, 2017 01:51 AM
சென்னை, ஆர்.கே.நகரில், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது போல், மதுசூதனனுக்காக, அமைச்சர்கள் தீவிரமாக பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சசிகலா அணியில் தினகரன்; பன்னீர் அணியில் மதுசூதனன் போட்டியிட்டனர்.
தீவிரமில்லைதினகரனுக்கு ஆதரவாக, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களும் களமிறங்கினர். மதுசூதனனுக்கு ஆதரவாக, பன்னீர் அணியினர் மட்டுமே பிரசாரம் செய்தனர்.
தற்போது, அ.தி.மு.க., வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்தில், மதுசூதனன் போட்டியிடுகிறார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன், சுயேச்சையாக நிற்கிறார்.
முன்னர், தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியது போல, தற்போது, மதுசூதனனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள் தீவிரமாக பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய பிரமுகர்கள்
இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது:
தினகரன் போட்டியிட்ட போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆகியோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், தினமும் காலை, மாலை என, இரண்டு வேளையும் பிரசாரம்
செய்தனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்து சென்று, ஓட்டு கேட்டனர். தற்போது, மூத்த அமைச்சர்கள் உட்பட, முக்கிய பிரமுகர்கள் பலரும், காலை, 10:00 மணிக்கு தான் தொகுதிக்கு வருகின்றனர். சிலர், காலை, 11:00 மணிக்கு மேல் வருகின்றனர்.
வேடிக்கை
அவர்கள், பிரசாரம் செய்வது போல, போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, திரும்பி செல்கின்றனர். மாலையிலும், இதே நிலை தான் தொடர்கிறது.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், வேட்பாளருடன் வாகனத்தில் வரும் போது, அதில் ஏற காட்டும் ஆர்வத்தை, மக்கள்
வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, ஓட்டு கேட்பதில் காட்டுவதில்லை.
சில, எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தேர்தல் பணிமனையை விட்டு வெளியே செல்வதில்லை.
அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, ஓட்டு கேட்காமல், தெரு முனைகளில், நாற்காலி போட்டு அமர்ந்து, மற்ற கட்சியினர் ஓட்டு கேட்பதை, வேடிக்கை பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
