ADDED : ஜன 14, 2018 01:03 AM

குன்னுார்:'குன்னுாரில் அதிகரித்து வரும் குரங்கு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார், ஊட்டி, கூடலுார், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில், குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது, இந்த குரங்குகள், வனப்பகுதிகளை விட குடியிருப்புகளை அதிகளவில் நாடி வருகின்றன.குறிப்பாக, குன்னுார் பகுதிகளில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவை வீடுகளுக்குள் புகுந்து, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கின்றன; பொருட்களை சேதப்படுத்தும் செயல்களும் தொடர்கின்றன. வீட்டு மாடிகளில் வெயிலுக்கு உலர வைக்கும் பொருட்களை எடுத்து வீணாக்கி வருகின்றன. கேபிள்கள் மீது ஏறி விளையாடுவதால், இணைப்புகளும் துண்டிக்கப்படுகின்றன.
பெரும்பாலான மக்கள், உணவுக் கழிவுகள் மற்றும் வீணாகும் தின்பண்டங்களை, பிளாஸ்டிக் பைகளில் கொட்டி, குப்பை தொட்டிகளில் வீசுகின்றனர். இவற்றை உட்கொள்ள வரும் குரங்குகள், பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுக் கழிவுகளை உட்கொள்வதால், வயிற்று கோளாறு ஏற்படுகிறது.
குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், குரங்குகளுக்கு மக்கள் உணவுகளை வழங்குவதால், வனங்களில் கிடைக்கும் பழங்களை விட, இவற்றையே அதிகம் உட்கொள்ள துவங்கி உள்ளன. குன்னுாரில் வண்டிச்சோலை வட்டப்பாறை பகுதியில், 2015ல் குரங்குகளுக்காக சரணாலயத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார். ஆனால், தற்போது இந்த சரணாலயம் பூட்டப்பட்டு கிடக்கிறது. இந்த சரணாலயத்தை திறக்கவும், குரங்குகளை பாதுகாக்கவும், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
