ADDED : டிச 27, 2018 01:51 AM

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.
நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். 5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை.'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பதே நட்பு'என்கிறார் வள்ளுவர். இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் சொன்ன வார்த்தைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நட்பிற்கு இலக்கணம் சொல்லும். நண்பர்கள் என்பவர்கள் ஜாதி, மத, இன மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்கள். நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல் நமது தவறுகளை தட்டிக் கேட்கும் தகப்பனாக மாறும் இயல்பை உடையவர்கள். பெற்றோர்களிடமும் மற்ற உறவுகளிடமும் கூற இயலாத பலவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலும்.நண்பன் யார்?'உன் நண்பன் யார் என்று சொல்? நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்' என்பார்கள். நண்பர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் குணமே நம்மை வந்து சேரும். கற்பைப் போலவே நட்பும் புனிதம் என்ற வரிகள் இதற்காகவே எழுதப்பட்டு இருக்கலாம். பெரும்பாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம். அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம். வள்ளுவர் நட்பிற்கு மட்டுமே அதிக அதிகாரங்களை திருக்குறளில் வைத்துஉள்ளார். நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதும் இதன் மூலமாக நாம் அறிய இயலும்.'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'என்கிறது நற்றிணையில் வரும் பாடல் ஒன்று. நண்பர்கள் கொடுப்பது நஞ்சாக இருப்பினும் அதை எவ்வித சந்தேகமும் இன்றி உடனடியாக பருகுவதே நல்ல நட்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.சந்தேகம் இல்லா நட்புநண்பர்களுக்குள் சந்தேகம் இருக்க கூடாது. சந்தேகம் இருந்தால் அது நல்ல நட்பாக இருந்திட முடியாது. நட்புஎன்பது ஒருவித உணர்தல். நம்மை அறியாமல் நமக்குள் ஊடுருவும் பரவசம். இன்னமும் பள்ளிக் கால நண்பர்கள் சந்திக்கும்போது அந்த பால்யகால நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகத்தை நவீன உலகில் நாம் பெற்றுவிட முடியாது. இன்றைய அவசர உலகில் நாம் அருகில் இருப்பவர்களோடு கூட நட்பு பாராட்ட நேரம் ஒதுக்குவதில்லை.சம்பாதித்து இருக்கும் செல்வங்கள் எல்லாம் இழந்து நின்றாலும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களோடு இருந்து ஆறுதல் படுத்தும் நண்பர்கள் கிடைப்பது பெருவரமே. நல்ல நட்பிற்கு பல உதாரணங்கள் படித்திருப்போம். சங்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரை பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், இன்று இன்னும் ஒருபடி மேலே சென்று முகநுால் நண்பர்கள் என்று உலகம் நட்பால் விரியத் தொடங்கி உள்ளது.'நண்பர்களுக்காக எதையும் இழக்கலாம்எதற்காகவும் நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்'-சதா பாரதிஇன்றைய சூழலில் நாம் இருக்கும் இந்த உயரத்திற்கு காரணமான நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் நம்மோடு தொடர்பில் இருக்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள். ஏணி போல இருந்து ஏற்றிவிட்ட நண்பர்கள் நாம் ஒரு குறிப்பிட்ட உயரம் தொட்டவுடன் நம்மிடம் இருந்து மெதுவாக விலகி நின்று நமது வளர்ச்சியை பார்த்து ஆனந்தம் கொள்வார்கள். நமக்கு தொந்தரவு கொடுத்து விடக்கூடாது என்பதற்காக விலகி நிற்பார்கள்.அப்படிப்பட்ட நண்பர்களை அழையுங்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உரிமையோடு ஏதாவது செய்யுங்கள். நம்மிடம் உதவி பெற்றால் அது அவர்கள் செய்த உதவிக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்று தயங்கி நிற்பார்கள். அவர்களின்தயக்கத்தைப் போக்கி அரவணைத்துக் கொள்ளுங்கள்.துன்பம் துடைப்பவன்'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு'என்கிறார் வள்ளுவர். நல்ல நண்பன் என்பவன் எதையும் எதிர்பாராமல், நண்பர்களுக்கு வரும் துன்பத்தை துடைப்பவனே ஆவான். பள்ளிப்பருவ நட்பை நினைத்துப் பாருங்கள். கல்லுாரி காலங்களில் உணவுக்கு தவித்தபோது உணவை நமக்கு கொடுத்த வள்ளலாக நண்பர்கள் இருந்திருப்பார்கள். நமது கல்லுாரிக் கட்டணத்தை கட்ட இயலாமல் போகும்போது நமது நிலை அறிந்து அவன் தந்தையிடமோ தாயிடமோ பெற்று எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கட்டிய தருணங்கள் எல்லோருக்கும் நடந்திருக்கும்தானே.அந்த நண்பர்களை தேடுங்கள். இப்போதுஇருக்கும் நவீன உலகில் அவர்களை இணைப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அந்த நண்பர்களோடு நம்முடைய பழைய நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நமது வாழ்வின் புதிய தொடக்கமாக அந்த நாள் இருக்கும். எத்தனையோ மகிழ்வினைத் தரும் தருணங்கள் நமக்கு வாய்க்கும்.மனிதர்களை நேசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக நமது குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களின் நண்பர்கள் பற்றி கேளுங்கள். முடிந்தால் அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லுங்கள். தோளோடு தோள்நின்று பேசும் தோழமையோடு பேசுங்கள். சின்ன சின்ன சந்தோஷங்களை நமக்குள் நிகழ்த்திய அந்த நண்பர்கள்தான் இன்று நாம் பெரிய பெரிய சாதனைகள் செய்வதற்கும் காரணமாக இருக்கிறார்கள்.நண்பர்களைத் தேடுங்கள்... நலமாக வாழ்வதற்கு!-முனைவர். நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்99941 71074
